இன்றைய தியானம்(Tamil) 22-02-2021
இன்றைய தியானம்(Tamil) 22-02-2021
முழங்கால் வல்லமை
“பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி,…” – அப். 9:40
புத்த மார்க்கத்தை சேர்ந்த 19 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் காசநோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவராகவும், நம்பிக்கையற்றவராகவும் மனம் பேதலித்த நிலையில் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனார். வாழ்வில் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுபெண் அந்த வாலிபனிடத்தில் வந்து, இயேசு கிறிஸ்துவை குறித்து கூறி ஒரு புதிய ஏற்பாட்டையும் கொடுத்தாள். ஆனால் அந்த வாலிபனோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, இது அவனுக்கு புத்தியீனமாகத் தோன்றியது. அந்த சிறுபெண் அடுத்தடுத்த நாட்கள் மீண்டும் மீண்டும் இயேசுவின் அன்பை அறிவிக்க வந்தாள். வாலிபனோ புதிய ஏற்பாட்டை தூக்கி எறிந்து அவளை திட்டி அனுப்பினான். அந்த சிறுபெண் சற்றும் மனம் தளராமல், எதையும் பொருட்படுத்தாமல் அந்த வாலிபனுக்காக முழங்கால்படியிட்டு ஜெபித்தாள். அப்படியாக, அவள் முழங்கால்படியிட்டு ஜெபித்தபோது, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடியது. இந்த சூழ்நிலையில்தான் அந்த வாலிபன் இயேசுவின் அன்பை உணர்ந்தார், ஜெபித்தார், அற்புத சுகம் பெற்று இன்றும் ஊழியம் செய்துவருகிறார். அவர்தான் தென்கொரியாவில் தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்படுகிற போதகர் பால்யாங்கி சோ.
பரிசுத்த வேதாகமத்தில் யோப்பா பட்டணத்தில் தொற்காள் என்னும் ஈகை குணமுள்ள ஒரு சீஷி இருந்தாள். அவள் மிகுந்த நற்கிரியைகளைச் செய்து கொண்டு வந்தாள். ஒருநாள் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அப்பொழுது பேதுரு எல்லாரையும் வெளியே போகச் செய்து, அவளுக்காக முழங்கால்படியிட்டு ஜெபம்பண்ணினார். தேவன் ஜெபத்தைக் கேட்டு அவளை உயிரோடு எழுப்பினார்.
இதை வாசிக்கின்ற அன்பரே! உங்களுடைய முழங்கால் ஜெபம் மிகவும் விலையேறப்பெற்றது. முழங்கால் ஜெபத்தில் மிகுந்த வல்லமை உண்டு. மரித்துக்கொண்டிருந்த பால்யாங்கி சோ வாழ்க்கையை ஒரு சிறுபெண் முழங்கால் ஜெபம் உயிரடையச் செய்தது. ஆம், பணத்தினாலும், மருத்துவர்களாலும் செய்ய முடியாததை முழங்கால் ஜெபத்தினால் செய்ய முடியும். இன்று உங்களுடைய செத்துப்போன சூழ்நிலைகள் நிமித்தமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய நம்பிக்கை மரித்துவிட்டதா? இன்றே முழங்காலை முடக்குங்கள். முயற்சித்து தோற்றுப்போனவை முழங்காலால் ஜெயம் பெறும். உங்களுக்கு அருமையானவரை மருத்துவமனையில் வைத்து என்ன நடக்குமோ என்று கலங்கிக் கொண்டிருக்கிறீர்களோ, முழங்காலில் தேவனோடு போராடுங்கள். கண்ணீரை ஆயுதமாக்குங்கள். அற்புதம் நிச்சயம்!
-Mrs. சக்தி சங்கர்ராஜன்
ஜெபக்குறிப்பு:
லெந்து கால கூடுகைகளில் சகோ. டேவிட் கணேசன் அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250